2013年6月20日星期四

பல கிறுக்கல்களில் சில - 13 மனவியலும் அறிவியலும்

                                           மனவியலும் அறிவியலும் 

பள்ளியில் இருந்து திரும்புவதற்கு 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது முருகனுக்கு. அப்போது முருகன் ஐந்தாம் வகுப்பு மாணவன். படு சுட்டி. வீட்டுக்குள் வந்தவன், வேகமாக தன் புத்தக மூட்டையை ஒரு ஓரத்தில் கிடத்திவிட்டு, சமயலறையில் இருந்த தன் அம்மாவிடம்

 "அம்மா மிஸ் என்னை நகம் வெட்டச் சொல்லி திட்டினாங்க. நகம் வெட்டி விடு" 

 "மொதல்ல நீ சாப்பிடு. நகம் வெட்டுறத காலைல செய்வோம்."

 "இல்ல எனக்கு இப்போவே வெட்டனும்"

 "அடம் பிடிக்காதே. இப்போ வெட்டகூடாது"

 "ஏன்?"

 "ராத்திரியில் நகம் வெட்டக்கூடாது. வீட்டுக்கு ஆகாது." அவனும் ஒப்புக்கொண்டு மறுநாள் காலையில் நகம் வெட்டிவிட்டு பள்ளிக்குச் சென்றான். 

வருடங்கள் ஓடிவிட்டன. முருகனுக்கு திருமணம் முடிந்து 8 வயதில் ஒரு மகள். இனிய தமிழ் பெயர் "கவிதாயினி". ஒருநாள் இரவு கவிதாயினி தன் அப்பாவிடம் 

"அப்பா, I was scolded by my class teacher for not having my nails cut. I need to cut it now.

"No. கவிதாயினி You cannot cut your nails now. May be tomorrow, in the morning"

"அப்பா......!!!!!! But why not now?"

"You should not be cutting them at night"

"அதத்தான் கேக்குறேன். why shouldn't  we be cutting them at night.?"

"கவிதாயினி you should have implicit obedience to certain things in life. You can neither question nor answer them" அவள் ஒன்றும் புரியாமல் சென்றுவிட்டாள்.


முன்னவர்கள் விட்டுச்சென்ற பாரம்பரியமிக்க கூற்றுகளையும் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் அப்படியே (ஆமாம்  அப்படியே.,!!!! எவ்வளவு படித்திருந்தாலும் பகுத்தறியும் திறனை புறந்தள்ளி கண்மூடித்தனமாக,மூடத்தனமாக) இன்றளவும் பின்பற்றுவதில் இந்தியர்களை மிஞ்ச வேறு யாருமிலர். குறிப்பாக தென்னிந்தியர்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள். 

பெரும்பாலான தமிழ் இல்லங்களில் நகம் வெட்டுவதில் ஆரம்பித்து  திருமணம் செய்வது வரை அனைத்திற்கும் நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம். எம கண்டம், சகுனம்  பார்க்கப் படுவதுண்டு. சாமி பூஜையில் இருந்து பூமி பூஜை வரை,,, பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மைச் சுற்றியே வருகிறது ஜோதிடமும் பஞ்சாங்கமும்.  இதுவெல்லாம் போதாத குறைக்கு புதுவிதமான (மூட) நம்பிக்கைகள் பல இன்றும் நம்மை நோக்கி படை எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. உதாரணம்: தமிழ் பெயர்களுக்கும் சம்ஸ்கிருத பெயர்களுக்கும் ஆங்கில எண் கணித ஜோதிட முறையில் பெயர் மாற்றம்.!!!!!பேரண்டத்தில் எங்கோ இருக்கும் கோள்களுக்கும், நம் ஜாதகத்திற்கும், அதை கணித முறையில் வாசிக்கும் அன்றுதான் பெயர் தெரிந்த ஜோதிடருக்கும் இருக்கும் மரியாதை, திருமண விஷயத்தில் நம் வீட்டு பிள்ளைகளுக்கு நாம் கொடுப்பதில்லை. கோள்களையும், ஜாதகத்தையும், ஜோதிடரையும் கடந்த பின்னர் தான் தமிழகத்தில் பெரும்பாலான இரு மனங்களுக்கு திருமணம் நடக்கிறது. 


நம்  கண் முன்னே இருக்கும் பிள்ளைகளுக்கும், அவரது மனங்களுக்கும் கொடுக்கப்படாத மரியாதையும் நம்பிக்கையும் நாம் பார்த்தறியாத கோள்களுக்கும், அன்று மட்டுமே பார்த்த ஜோதிடருக்கும் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? நாம் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் ஜோதிடத்தின் நம்பகத்தன்மையையும்  பெயர் காரணத்தையும் வரலாற்றையும் என்றாவது ஒரு நாள் பகுத்து ஆராய்ந்திருப்போமா? நான் படித்து அறிந்ததில் இருந்து வெகு சில இதோ...

அ. "ஜாதகம்" என்ற சொல் தமிழ்ச் சொல்லா? ஜாதக முறை இந்தியர்களால் எழுதப்பட்டதா?
                      வேதங்களில் இருந்து பெறப்பட்டதே நமது ஜோதிடக்கலை என்று நாம் பெருமை பேசினாலும், பதிவிலிருக்கும் இந்தியாவின் ஜோதிடக்கலையின் மிகத் தொன்மையான நூல் என்பது "யவன ஜ்யாடகா" (yavana jyaataka) என்பதுவே ஆகும்.  யவனர்களின் (கிரேக்கர்கள்) மாபெரும் படையெடுப்புக்கு இந்தியா அடிபணிந்தது வரலாறு. அக்காலத்தில் (கி.மு. 130-110) யவநேஸ்வரா என்ற கிரேக்க அரசின் குறுநில மன்னனால் எழுதப்பட்ட நூலே "யவன ஜ்யாடகா" ஆகும். கிரேக்க ஜோதிடக் கலை நூலின் சம்ஸ்கிருத தழுவலே இந்நூல். சமஸ்கிருதத்தில் "யவனம்" என்றால் "கிரேக்கம்" என்றும்,. "ஜ்யாடகா" என்றால் "பூர்வீகம்" என்றும் பொருள் படும்.

ஆ. "ஜோதிடம்" தமிழ்ச் சொல்லா? அர்த்தம் என்ன?
                                    "ஜோதிடம்" என்பது "ஜ்யோட்டிஷா" என்ற சம்ஸ்கிருத சொல்லிலிருந்து திரிந்ததே ஆகும். "ஜ்யோட்டிஷ்" அல்லது "ஜ்யோட்டிஷா" என்றால் "வெளிச்சம், மிக உயரத்தில் இருக்கும் அல்லது வானத்தில் இருக்கும் பார்த்தற்கு அரிய  பொருள்" என்று பொருள் படும். 

இ. "Astrology" -  "Astronomy" இரண்டும் அறிவியலின் வெவ்வேறு பிரிவுகளா?
                       17ஆம் நூற்றாண்டு வரை இவ்விரண்டும் அறிவியலின் ஒரே துறையை சார்ந்தவை தான். பெயர்களின் பிறப்பிடம் மட்டும் வெவ்வேறு மொழிகளில். "Astrology" என்பது இலத்தீன (latin) மொழி. "Astro" என்றால் நட்சத்திரம். "logy" என்றால் படிப்பது.   "Astronomy" என்பது கிரேக்கச் சொல். "Astron" என்றால் நட்சத்திரம். "nomy" என்றால் "இயல்பு" அல்லது "இயல்" என்று பொருள். 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இவ்விரு வார்த்தைகளுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு அந்நூற்றாண்டின் இறுதியில்  "Astrology" என்பது மனவியல் சார்ந்த நம்பிக்கையாக மட்டுமே மாறிவிட்டது.

ஈ. அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?
                               முதலில், பிரதமை முதல் சதுர்த்தசி வரை பெயர்க் காரணங்களை பார்ப்போம்.

ஒரு மாதத்திற்கு ஒரு அமாவாசை , ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது. அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரைக் கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள் ! நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன .

1. பவுர்ணமி , அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை. பிரதம என்றால் முதல். (எ.கா: பிரதம மந்திரி- முதல் மந்திரி) என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள். "தோ/துவி " என்றால் இரண்டு. (எ.கா: துவிச் சக்கர வண்டி என்று சைக்கிளைக் கூறுவர்.)

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள். திரி என்றால் மூன்று.                         
 (எ.கா: திரிசூல்-திரிசூலம்).

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள். (எ.கா: சதுர் - சதுரம் நான்கு பக்கங்கள் கொண்டது.)

5. பஞ்சமி என்றால் ஐந்தாம் நாள் (எ.கா: பாஞ்ச் - பஞ்ச என்றால் ஐந்து எனப் பொருள்.)

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள். "ஷஷ்த" (ShaShTha) என்றால் சமஸ்க்ரிதத்தில் ஆறு என்று பொருள் படும். சமஸ்க்ரித இலக்கணம் நாட்களை பெண்பாலாகக் கருதுகிறது. எனவே "ஷஷ்த" என்பது ஷஷ்தி எனவும் ஷஷ்டி எனவும் திரிந்தது. (எ.கா: சஷ்டி என்பது முருகன் பெயர். முருகனுக்கு ஆறு தலைகளும் ஆறு வீடுகளும் இருப்பது நாம் அறிவோம்)

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். "ஷாப்த்/ஷாத்/சப்த" என்றால் ஏழு. (எ.கா: சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்கள் உள்ளன)

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். "ஆட்/அஷ்ட" என்றால் எட்டு. (எ.கா: அஷ்டவக்கிரம், அஷ்ட கோணல்கள், அஷ்ட லட்சுமி)

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள். நவ என்றால் ஒன்பது. (எ.கா: நவ கிரகங்கள்)

10. தசமி என்றால் பத்தாம் நாள். தஸ் என்றால் பத்து. (எ.கா: தசாவதாரம்)

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள். ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து. இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள். தோ/துவி என்றால் இரண்டு. தஸ் என்றால் பத்து. எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள். திரி என்றால் மூன்று. தஸ் என்றால் பத்து..இதன் கூட்டுத்தொகை பதிமூன்று ஆகும்.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள். சதுர் (சதுரம்) என்றால் நான்கு. அத்தோடு தஸ் என்ற பத்து சேர்ந்தால் பதினான்கு என ஆகும்.
சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது ? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருக்கிறதா? இல்லை. மனவியல் ரீதியான காரணங்கள் மட்டுமே உண்டு.

நான் கேள்விப்பட்ட சில மனவியல் ரீதியான காரணங்கள்:

1. ஏன் என்று தெரியாது ஆனால் அது நல்ல நாள் இல்லை என்பது தெரியும். (பெரும்பான்மையானவர்கள் கொடுக்கும் காரணம் இதுவே.!! "பத்தோடு பதினொன்று." "ஊரோடு ஒத்து வாழ்" என்பது இவர்களுக்காகவே எழுதப்பட்டது.)

2. அமாவாசையில் இருந்தோ பௌர்ணமியில் இருந்தோ அஷ்டமி எட்டாவது நாளாகவும், நவமி ஒன்பதாவது நாளாகவும் வருகிறது. 8வது நாளாக அஷ்டமி வருவதால் அதனை சனி ஆட்கொள்கிறது. 9வது நாளாக நவமி வருவதால் அதனை செவ்வாய் ஆட்கொள்கிறது. சனியும் செவ்வாயும் மனிதனின் புது முயற்சிகளுக்கு ஏற்றவை அல்ல. (செவ்வாய் கிழமைகளிலும் சனிக் கிழமைகளிலும் எந்த ஒரு காரியங்களும் தொடங்கப்படாமலிருக்க இதுவே காரணம்.)

3.  எட்டாவது நாள் அஷ்டமியை தன் வசம் வைத்திருப்பவர் ருத்ரர். ருத்ரர் என்பது சிவனின் மிகுந்த கோபம் கொண்ட ரூபம். ஒன்பதாவது நாளான நவமியை ஆள்வது பார்வதி தேவியின் மறு உருவமான அம்பிகா. சிவனும் பார்வதியும் இவ்விரு நாட்களில் மிகவும் கோபமாக காட்சியளிப்பதால், இவை நல்ல காரியங்களைத் தொடங்க உகந்த நாட்கள் இல்லை. (கடவுள் கோபமாக இருக்கும் போது நாம் சந்தோசமாக இருக்கக்கூடாது போலும்).

4. மகா விஷ்ணுவின் அவதாரங்களான ராமர் பிறந்தது நவமி. கிருஷ்ணர் பிறந்தது அஷ்டமி. இருவரும் கடவுள்களாகவேக் கருதப்பட்டாலும், பல இன்னகளுக்கு ஆளானவர்கள். ராமருக்கு 14 வருட வனவாசம், சீதை கடத்தப்பட்டது என பல துயரங்கள். கிருஷ்ணருக்கு தாய் மாமன் மூலமாகவே கொலை முயற்சிகள், தாய் மாமன் கம்சனை கொல்வதன் மூலமாக மட்டுமே கிடைக்கும் அரியணை, குடும்ப சண்டைகள் என அவர் போகும் இடங்களில் எல்லாம் குழப்பம், சண்டைகள், சச்சரவுகள். (கடவுள்களுக்கே அஷ்டமி நவமி இவ்வவளவு இன்னல்களை கொடுக்கும் போது, சாமானியனை விட்டு வைக்குமா?)

5. சனியின் வீரியத்தையும் செவ்வாயின் வீரியத்தையும் தாங்கும் சக்தி மனிதர்களிடம் இல்லை. ஆதலால் அஷ்டமியும் நவமியும் மனிதர்களுக்கு ஏற்ற நாட்கள் அல்ல. சனியாலும் செவ்வாயாலும் விஷ்ணுவையும் சிவனையும் மட்டுமே ஒன்றும் செய்ய இயலாது. எனவே அந்த இரு நாட்களிலும் மக்களாகிய நாம் இவ்விரு கடவுள்களையும் மனமுறுக வேண்டி தஞ்சமடைய வேண்டும். (அப்போ, ராமரும் கிருஷ்ணரும் விஷ்ணுவின் அவதாரங்கள் இல்லையா? அவர்கள் கடவுள்களாய் இருந்திருந்தால் சனியும் செவ்வாயும் அவர்களை எப்படித் தாக்கியிருக்கும்? சில கேள்விகள் என் மனதில் இப்பொழுது. 1.அஷ்டமி நவமி பற்றிய செய்திகள் தவறா?  2.ராமர், கிருஷ்ணர் இருவரும் கடவுள்கள் இல்லையா?  3.அஷ்டமி நவமி பற்றிய செய்திகள் உண்மையாயின்,  ராமரும் கிருஷ்ணரும் சாதாரண மனிதர்கள் தானே. அவர்களை ஏன் வணங்க வேண்டும்? 4. ராமரும் கிருஷ்ணரும் கடவுள்களாய் இருந்தால், அஷ்டமி நவமி பற்றிய செய்திகள் பொய்தானே. அவற்றை ஏன் பின்பற்ற வேண்டும்?)

6. நம் மன்னர்களும் முன்னோர்களும் அஷ்டமியும் நவமியும் போர் செய்வதற்கான நாட்கள் என குறித்திருக்கிறார்கள். போர் செய்து பல உயிர்கள் கொல்லப்படும் நாட்களில் நல்ல காரியங்கள் செய்வது உகந்ததல்ல. இந்த நாட்களில் நமக்கு இருக்கும் சச்சரவுகளை தீர்த்துக்கொள்ளலாமே தவிர நல்ல காரியங்கள் அறவே கூடாது என்றும் கூறப்படுவது உண்டு. (இருப்பதிலேயே முட்டாள்த்தனமான காரணமாக இதுவாகத் தான் இருக்க முடியும். நாம் இன்றும் போர் செய்து கொண்டா இருக்கிறோம்? முன்னர் கூறியது போல் கிரேக்க சாம்ராஜ்யத்தின் ஜோதிடக் கலையின் பால் ஈர்க்கப்பட்டு, அவர்களிடம் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட "யவன ஜ்யாடகா" என்னும் நூலே அறிவியல் ரீதியாக முதன்முதலில் இந்தியாவில் பதிவாகி இருக்கும் ஜோதிடக் கலை நூல். அங்கிருந்து வந்ததுதான் போர் புரிதலுக்கு நாள் குறிக்கும் பழக்கம். கிரேக்க சாம்ராஜ்யத்தின் பெருவாரியான வணிகமும் ஆக்கிரமித்தலும் கடல் வழியாகத்தான் இருந்தது. கடல் வழியாக சென்று போர் புரிவதற்கு உகந்த நேரம் எது என்பதை அவர்கள் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து எழுதினர். பூமி, சந்திரன், சூரியன் இவை மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கும் பொழுது (அமாவாசை அல்லது  பௌர்ணமி) கடல் ஆழிப்பேரலைகளோடு கொந்தளிக்கும். இதை ஆங்கிலத்தில் "ஸ்ப்ரிங் ஹை டைட்ஸ்" (spring high tides) என்பார்கள். இதனுடைய தாக்கம் 3 முதல் 4 நாட்கள் வரை நீடிக்கலாம். ஐந்தாவது நாள், அதாவது பஞ்சமி அன்று அவர்கள் கரை ஒதுங்கினாலும், அவர்கள் களைப்பாற, வேவு பார்க்க, எதிரிகளைத் தேடிச் சென்றடைய, தற்காப்பு கூடாரங்கள் அமைக்க என 2 முதல் 3 நாள் வரை தேவைப்படும். பின்னர் போரிடுவர். பஞ்சமியில் இருந்து 2 அல்லது 3 நாட்களை கழித்தால் அஷ்டமியும் நவமியும் வந்துவிடுகிறது. கிரேக்கர்களின் அறிவியல் ஆய்வுத் திறனைக் கண்டு வியந்த நம் மன்னர்களும் அதை பின்பற்றினர். இதுவே அஷ்டமியும் நவமியும் போரிடுவதற்கு உகந்த நாட்கள் எனக் கூறக் காரணமாயிற்று.)

 செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை , கடவுளை நம்பித்தான் இருக்கிறது என்று நினைத்து உருவாக்கப்பட்ட "நல்ல நேரம் , கெட்ட நேரம்" என்ற பயங்கள் உலகெங்கும்
மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்) 
இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம். 

வாரத்தில் செவ்வாய் , சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது( 10 நாட்கள்).

மாதத்தின் அஷ்டமி , நவமி நன்மைக்கு உகந்தது அல்ல( 4 நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை( 2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம் , எமகண்டம் , குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 நாட்கள்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள். மொத்தம் 21 நாட்கள்.


இவற்றில் ஒரு அஷ்டமியும் சனியும், ஒரு நவமியும் செவ்வாயும் தற்செயலாக சேர்ந்து வருமாயின் 2 நாட்களை கழித்து விடலாம்.               எனவே 21-2=19 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 19 நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு செயலின் வெற்றியோ தோல்வியோ தன்னை பாதிக்க கூடாது என்பதற்காகவே மனிதன் விதியை நம்பினான். தன்னுடைய விதியை முன்னதாகவே அறிந்துகொள்ள வழிகளைத் தேடியவனுக்கு ஜோதிட அறிவியல் ஆறுதல் அளித்தது. ஜோதிடம் மூலம் கெட்ட எதிர்கால விதியை அறிந்தவனுக்கு உதவும் கரங்களாக காட்சியளித்திருக்கிறது மனவியல் சம்பந்தப்பட்ட கோவில்களும் கோவிலுக்குள் இருக்கும் உயிரற்ற சிலைகளும். இவ்வாறே மனவியலையும் அறிவியலையும் பிணைத்து விட்டான் அவன்.

எவன் ஒருவன் தன் படைப்புகளையும் சிந்தனைகளையும் நம் மீது திணிக்கிறானோ, அதை எப்போது  நாம் ஏற்றுக்கொள்கிறோமோ அப்போதே நாம் அவனைச் சார்ந்தவனாகி விடுகிறோம். அவன் வென்றுவிட்டவன், நாம் தோற்றுவிட்டவர்கள். அதே மன நிலையோடு இருந்ததால்தான் நமக்கு அறவே சம்பந்தமற்ற துருக்கியர்களும், மொகலாயர்களும், சுல்தானியர்களும், யவனர்களும்,போர்ச்சுகீசியர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் பல நூறு வருடங்களாக நம்மை ஆண்டார்கள். பல நூறு வருடங்களுக்கு முன்பு தோற்றோம். இன்றும் எழவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நாம் தவறாக ஏற்றுக்கொண்டதை எல்லாம் இன்றும் கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பேணி காத்துக் கொண்டிருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நம்பிக்கைகளை நான் சாடவில்லை. ஆனால் தவறான நம்பிக்கைகளை விதைத்து  அவர்களையும் அல்லவா தோற்கடித்துக் கொண்டிருக்கிறோம். நேற்றைய தினம் கடந்து விட்டது. நாளைய நம் சமூகம் வெல்ல இன்றைய சமூகம் விழித்துக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் "பகுத்தாராய்தல்". நாமும் செய்வோம் நம் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்போம். மூடநம்பிக்கை இல்லாத வளமான, வலிமையான சமூகத்தில் நம் பிள்ளைகளாவது வளரட்டும்.

                                                                          -போ. ரவிசந்திர பிரகாஷ்.

2013年6月8日星期六

பல கிறுக்கல்களில் சில - 12 ஊனமற்ற அன்பு

                                                         ஊனமற்ற அன்பு 


"முஹம்மது பாய்..., கறி ரெடியா??

"இந்தா!! ரெண்டு நிமிஷம்..."

"அட சீக்கிரம் கொண்டு வாங்க பாய், வெங்காயம், தக்காளி அடிப் புடிக்குது".   

"என்னப்பா,,!! ஏமாந்தவங்கதானேனு மொக்க மொக்கையான கறியெல்லாம் இங்க கொண்டு வந்திருக்கியா? எங்க பாப்போம்?" 

மாஸ்டர் பாத்திரத்தைக் கிண்ட, கறிக்கடை பாய், கொண்டு வந்த கறித்துண்டுகளைக் கழுவ, முதியவர் ஒருவர் அருகிலிருந்தவாறே சமையல் தரத்தை ஆய்வு செய்துகொண்டிருக்க, சந்திரன், தான் கொண்டு வந்த இனிப்புகளை அங்கு இருந்த குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கினான். இனிப்புகளை வாங்கிய குழந்தைகளின் முகத்திலிருந்த சந்தோசத்தைப் பார்த்து, தானும் மகிழ்ந்தான். பின்னர் குழந்தைகளோடு சேர்ந்து அவர்கள் தங்குமிடம், வகுப்பறைகள், உணவருந்துமிடம் என அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். "பாய், தலையணை, செருப்பு" என குழந்தைகளிடம் என்னவெல்லாம் இல்லை என எழுதி வைத்துக்கொண்டான். அடுத்த முறை வரும்பொழுது வாங்குவதற்காக.                                                                    


                                  ---------------------- 30 நிமிடம் கழிந்தது. -----------------------


"யோவ் கறி வெந்திருச்சு..., அரிசி எங்கய்யா??"  மாஸ்டர் கத்த எடுபிடி வேகமாய் சந்திரனிடம் "சார், அரிசி........." என்று இழுத்தான். "சாரி, அரிசி மூட்டைய கார் டிக்கிலயே வச்சிட்டேன். இந்தாங்க சாவி, எடுத்துக்கோங்க. அப்பிடியே அதுல இருக்கும் கிரிக்கெட் பேட், பந்து எல்லாத்தையும் எடுத்திருங்க.. ஓகே?" எனச் சொல்லி, கார் சாவியை எடுபிடியிடம் கொடுத்தனுப்பினான். காருக்குச் சென்ற எடுபிடியை சில சிறுவர்கள் தொடர்ந்தனர். காருக்குள் வேறு என்னென்ன  இருக்கிறது என்பதை அறிய ஒரு கூட்டம், காருக்கு உள்ளே எப்படி இருக்கிறது என்பதை பார்க்க ஒரு கூட்டம். 

கிரிக்கெட் மட்டையும் பந்துகளையும் பார்த்தவுடன் அனைவருக்கும் குஷி.!! ஒருவன் மட்டும் "விளையாடலாமா?" என்றான். சந்திரன் "விளையாடலாம், ஆனா வெயில் அடிக்குதே!" என்றாற்போல் வானத்தை நோக்கினான். "பரவாயில்ல, இன்னைக்கு ஒரு நாள் விளையாடுங்க" என்று சந்திரனை இழுத்துச் சென்றான் அச்சிறுவன். குழந்தைகளுடன் சேர்ந்து சிரித்து விளையாடி அவன் களிப்புற்றிருந்தாலும் சிறிது களைப்பாற வேண்டியிருந்தது.  களைப்பாறினான்.






                                           -------------------1 மணி நேரம் கழிந்தது. -------------------


களைப்பாறிய  சந்திரனிடம் "சாப்பிடலாமா?" என்றார் பள்ளி மேலாளர். "ஓ.., போலாமே" என்றான்.  "போறியா என்ன வேணும்"......... என ஆடுகளத்தில் இருந்து பிள்ளைகளை விரட்டத் துவங்கினார்.

உணவருந்துமிடம்....... குழந்தைகள் அனைவரும் வரிசையில் வந்து அமர்ந்தனர். சந்திரனும் அவர்களுடன் அமர்ந்தான். அனைவருக்கும் அலுமினியத் தட்டு தரப்பட்டது. இவனுக்கு மட்டும் வாழை இழை. 
"எல்லாரும் தட்டுல சாப்பிடுறாங்க எனக்கும் அந்த மாதிரி ஒரு தட்டுலயே சாப்பாடு போடுங்க" என்றவனிடம் "இல்ல சார், பிள்ளைங்களுக்கு இழைல சாப்பிடத் தெரியாது., அதுவுமில்லாம நீங்க இந்த தட்டுல சாப்பிடக் கூடாது. பரவாயில்ல சார் பிள்ளைங்களுக்கு இதெல்லாம்  பழகிடுச்சு., நீங்க இழைலயே சாப்பிடுங்க" என்றார் மேலாளர். அவன் எழுதி வைத்திருந்ததில் "புது தட்டுக்கள்" என்பதையும் சேர்த்துவிட்டு  பின்னர் சாப்பிட்டான்.  சாப்பிட்ட பின் குழந்தைகள் அனைவருக்கும் பள்ளியின் முகப்பில் வைத்து மிட்டாய்களை வழங்கினான். மிட்டாய்களை வாங்கிய குழந்தைகள் சந்தோசமாக மாலை வகுப்புக்குச் சென்றமர்ந்தனர். சந்திரனும் புறப்பட ஆயத்தமானான்.


 மிகச்சரியாக அந்நேரம், ஒரு கணவன் மனைவி தங்கள் குழந்தையுடன் அங்கு வந்தனர். "சார், இது சரிப்பட்டு வராது., எல்லாம் சரி ஆயிரும்னு சொல்லித்தான் அனுப்பி வச்சீங்க.., ரெண்டு மாசம் ஆயிருச்சு, இது இன்னும் பேச மாட்டேங்குது, கூப்டா கேக்கவும் மாட்டேங்குது. இனிமே எங்களால இத வீட்ல வச்சி சமாளிக்க முடியாது. நீங்களே வச்சுக்கோங்க." எனச் சொல்லி குழந்தையை அங்கே விட்டுச் சென்றனர். அழுது கொண்டே இருந்த குழந்தையைப் பார்த்ததும் சந்திரனுக்கு அங்கிருந்து போக மனம் ஒப்புக்கொள்ளவில்லை.


 ஐந்தே வயது சிறுமி அவள். சாக்லேட் கொடுத்தான் அவள் வாங்கவில்லை. பந்துகளைக் கொடுத்தான் அதையும் வாங்காமல் அழுது கொண்டே இருந்தாள். எல்லாவற்றையும் அவளிடமிருந்து தள்ளிவைத்து விட்டு, அவளருகில் சென்று, தலை மேல் கை வைத்து "அழாத டா கண்ணா, அழக்கூடாது" என அவள் கண்ணீர் துடைத்து கை நீட்டினான். அவன் முழுவதுமாய்த் தன் கைகளை நீட்டுவதற்கு முன்பாகாவே, சிறுமி அவன் மேல் சாய்ந்து கொண்டாள். அழுது கொண்டே சாய்ந்தவள், உறங்கும் வரை அவனைவிட்டுப் பிரியவில்லை. விரித்திருந்த பாயில் அவளை கிடத்திவிட்டு கிளம்பினான்.


"சார் போறதுக்கு முன்னால இந்த புத்தகத்துல கையெழுத்து போட்ருங்க, ப்ளீஸ்" என மேலாளர் வழிமறித்தார். புத்தகத்தை வாங்கிப் பார்த்த சந்திரனுக்கு ஆச்சர்யம். "பரவாயில்லையே இத்தன பேர் நல்லது செய்யுறாங்களே!!" என்றான். சலித்துக்கொண்ட மேலாளர், "என்ன இருந்து என்ன சார் பிரயோஜனம், இதுங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கலையே. 1 லட்சம் பேர் இருக்குற ஊர்ல 100 குழந்தைங்க இந்த மாதிரி இருக்குதுங்க. அதே ஊர்ல 200 பேர் நல்லா சம்பாதிக்கிறவங்களும்  இருப்பாங்க. அந்த 200 பேர்ல 100 பேர் ஒவ்வொருத்தரா 3 மாசத்துக்கு ஒரு நாள் வந்து இவங்களுக்கு சாப்பாடு போட்டாலே இங்க தினமும் விருந்துதான். மொத்தமா காசு கொடுத்துட்டு போறவங்களும் உண்டு. அடுப்பு எரியிறதுக்கெல்லாம் இங்க வழி இருக்கு. ஆனா அடுப்ப மட்டுமே எரிய வச்சு இவங்க வயித்தெரிச்சல அணைக்க முடியாது சார். 5 வயசு குழந்தை அவ, மிட்டாய் கொடுத்தீங்க, பந்து கொடுத்தீங்க, அதுக்கெல்லாம் அடங்காதவ, அவளோட தலைய தொட்டு, தடவி, கண்ணீர் தொடைச்சி விட்டவுடனே எப்பிடி வந்து ஒட்டிக்கிட்டா பாத்தீங்களா? அதுதான் இவங்களுக்கு தேவை. நான் பேசி என்ன சார் ஆகப்போகுது. நீங்க கிளம்புங்க." என புத்தகத்தை வாங்கிக்கொண்டு வழியனுப்பி வைத்தார்.


வண்டியினுள் அமர்ந்தவன், தன சட்டைப் பையில் இருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான். அதில் "1.சாப்பாடு, 2.மிட்டாய்கள், 3.பாய், 4.தலையணை, 5.செருப்பு, 6.புது தட்டுக்கள்" என்ற வரிசையில் குழந்தைகளுக்குத் தேவையானவை எழுதப் பட்டிருந்தன. தன் பேனாவை எடுத்து மற்றுமொன்றை உள்ளே புகுத்தி, வரிசையை மாற்றி எழுதினான். அவ்வரிசை 
"1.அன்பு, 2.பாசம், 3.சாப்பாடு, 4.மிட்டாய்கள், 5.பாய், 6.தலையணை, 7.செருப்பு, 8.புது தட்டுக்கள்."  அடுத்த முறை வரும்பொழுது, வாரி இறைக்கும் இறைவனாய் இல்லாமல், கட்டித் தழுவும் மனிதனாய் வர முடிவெடுத்தான்.